சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த நான்கு நபர்கள் (04) கடற்படையின் உதவியுடன் கைது

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்படை கடந்த தினங்களில் அம்பலந்தோட்டை, பளைதீவு மற்றும் பெரியகார்சல் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த நான்கு நபர்கள் (04) கைது செய்துள்ளது.

தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் ஒருங்கிணைந்து அம்பலன்தோட்டை பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 7.03 கிராம் ஹெராயின் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் பளைதீவில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று பரிசோதனை செய்யப்பட்டதுடன் அங்கு இருந்து சுமார் 300 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 920 மில்லிகிராம் கேரள கஞ்சா ஆகியவற்றையுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் பொலிஸ் சிறப்பு பணிக்குழு உடன் இணைந்து மன்னார் பெரியகார்சல் பகுதியில் சுமார் 350 கிராம் கேரள கஞ்சாவுடன் மற்றொரு சந்தேக நபரை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 24 முதல் 33 வயதுக்குட்பட்ட அம்பலன்தோட்டை, குருநகர் மற்றும் பெரியகார்சல் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களுடன் கைது செய்யப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் மற்றும் டிங்கி படகு உட்பட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முறையே அம்பலண்தோட்டை, பூனரின் மற்றும் மன்னார் காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.

நாளுக்கு நாள் இந்த நாட்டின் இளைஞர்களை மூழ்கடித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடலிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.