வெள்ள அபாயங்கள் குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பின்னணியில், மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை கடற்படை தற்போது 10 நிவாரண குழுக்களை மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பல பகுதிகளில் நிலைநிறுத்தியுள்ளனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரைக்கு அமைவாக மேற்கு கடற்படை கட்டளை மூலம் இரத்தினபுரி பகுதிக்கு 04 கடற்படை நிவாரணக் குழுக்களையும் களுத்துறை புலத்சிங்கள மற்றும் பரகொட பிரதேசங்களுக்கு தலா 01 வெள்ள நிவாரணக் குழுக்களையும் அனுப்பியுள்ளது. இதேபோன்று, தெற்கு கடற்படை கட்டளை மூலம் மேலும் 02 நிவாரண குழுக்களை காலி தவலம மற்றும் நாகொட ஆகிய இடங்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அனுப்பியுள்ளது. களுத்துறை, பரகொட பிரதேசத்தில் களமிறங்கியுள்ள கடற்படையின் நிவாரணக் குழுவினர் தற்போது வெள்ள நிவாரண நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

மேலும், சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு கடற்படை கட்டளையின் 18 நிவாரண குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையிலிருந்து 06 நிவாரண குழுக்களும் வடமேல் கடற்படை கட்டளையின் 18 நிவாரண குழுக்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன.