அரபிக்கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குழுவொன்று கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது

அரபிக்கடலில் இயந்திரக் கோளாறில் சிக்கிய உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த 05 பேரை மீட்க கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் ஒருங்கிணைந்து எம். டீ அல்டெயார் (MT-ALTAIR) என்ற கப்பல் 2022 ஜூன் 20 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஓமான் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பல் ஓமானில் உள்ள டகம் (Duqm) துறைமுகத்துக்கு செல்ல டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஐந்து பணியாளர்களுடன் 2022 ஜூன் 6 ஆம் திகதி புறப்பட்டுள்ளது. அதன்படி, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் 2022 ஜூன் 17 அன்று கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த கப்பல் அரபிக்கடலில் உள்ளதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பின் பேரில் உடனடியாக செயல்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களுக்கு தகவல் அளித்தது. அதன்படி, இந்தியாவின் மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், பாதிக்கப்பட்ட மீன்பிடி படகிற்கு உதவ அப் பகுதி கடலில் சென்ற MT-ALTAIR என்ற கப்பலுக்கு அறிவுறுத்தியதுடன் குறித்த கப்பல் மூலம் படகில் இருந்த ஐந்து (05) பணியாளர்களும் 2022 ஜூன் 20 ஆம் திகதி மீட்கப்பட்டது.

மேலும், இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு-கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், பிராந்திய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களுடன் ஒருங்கிணைத்து கடலில் பாதிக்கப்படுகம் கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்குகிறது.