சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 35 பேர் கடற்படையினரால் கைது

மேற்குக் கடற்பரப்பில் 2022 ஜூன் 23 ஆம் திகதி மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 35 பேர் கொண்ட படகொன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை கடற்படையினர் 2022 ஜூன் 23 ஆம் திகதி பாணதுறை கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்றை அவதானித்து சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் (05), 25 ஆண்கள், 04 பெண்கள் மற்றும் 06 குழந்தைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பலின் இயந்திரம் தொழில்நுட்பக் கோளாறாக உள்ளதுடன் மேலும் நீண்ட கடல் பயணத்திற்கு பொருத்தமற்றதாக இருந்தமை மேலதிக ஆய்வுகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 06 முதல் 56 வயதுடைய சந்தேகநபர்கள் திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கல்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆட்கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள இவ்வாறான ஆள் கடத்தலில் சிக்கி சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்து சட்டத்தின் முன் சிக்குவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கோருகிறது.

மேலும், பழமையான மற்றும் நீண்ட கடல் பயணத்திற்குப் பொருத்தமற்ற பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் தொடர்ந்தும் இவ்வாறான மனித கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அவ்வாறான கப்பல்கள் சட்டவிரோதக் குடியேற்றத்தை மேற்கொள்ள முற்பட்டால் அவர்களின் உயிருக்குப் பெரும் ஆபத்து ஏற்படும் எனவும் கடற்படை பொதுமக்களை எச்சரித்துள்ளது.