வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 2022 ஜூலை 11 ஆம் திகதி மாலை மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் சர்வதேச கடல் எல்லையை மீறி சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகுகள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதை அவதானித்த கடற்படையினர் இந்திய மீன்பிடி படகுகளை விரட்ட நான்காவது விரைவுத் தாக்குதல் படையணிக்கு சொந்தமான விரைவுத் தாக்குதல் படகொன்றை குறித்த பகுதிக்கு அனுப்பியுள்ளனர். அங்கு, கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு சற்று தொலைவில் உள்ள கடலில் வைத்து இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று மற்றும் ஆறு (06) இந்திய மீனவர்கள் அவர்களது மீன்பிடி சாதனங்களுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகும், ஆறு (06) இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் மூலம் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும், நாட்டின் மீன் வளத்தையும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.