இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மன்னாருக்கு வடக்கு இலங்கை கடற்பரப்பில் 2022 ஜூலை 20 ஆம் திகதி இரவு மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சர்வதேச கடல் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழலின் பல்லுயிர் சேதம் மற்றும் உள்நாட்டு மீனவ சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட நான்காவது விரைவுத் தாக்குதல் படையணிக்கு சொந்தமான விரைவுத் தாக்குதல் படகொன்று மூலம் மன்னாருக்கு வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சர்வதேச கடல் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறு பேரும் அவர்களின் மீன்பிடி சாதனங்களும் தலைமன்னாருக்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், 2022 ஜூலை மாதத்தில் மட்டும் இந்த மீன்பிடி படகு உட்பட இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 04 இந்திய மீன்பிடி படகுகளுடன் அங்கிருந்த 29 இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, தீவைச் சூழவுள்ள கடற்பரப்பின் பாதுகாப்பை உறுதிசெய்து, உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.