இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி - SLINEX 2017 இல் பங்கெடுக்க கடற்படை கப்பல் சயுர மற்றும் சாகர இந்தியாவுக்கு பயணம்
 

இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2017ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் (Sri Lanka India Naval Exercise - SLINEX 2017) கலந்து கொள்வதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சயுர மற்றும் சாகர ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி இன்று (செப்டெம்பர், 04) பயணித்துள்ளது.

கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன, கடற்படையின் கொடிவரிசை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் கபில சமரவீர உள்ளிட்ட சிரேஷ்ட பல கடற்படை அதிகாரிகளினால் சம்பிரதாய பூர்வமான பிரியாவிடையளிக்கப்பட்டு குறித்த இரு கப்பல்களும் வழியனுப்பி வைக்கப்பட்டன. இப்பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற இரு கப்பல்களும் எதிர்வரும் ஆறாம் திகதி இந்திய துறைமுகமான விசாக பட்டிணத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 07ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூடுப்பயிற்சியில் இலங்கை கடற்படையின் 43 கடற்படை அதிகாரிகள் 60 மிட்சிப்மென்கள் உட்பட 368 கடற்படை வீரர்கள் பங்குகொள்ளவுள்ளனர்.

குறித்த கடற்படை கூட்டுப்பயிற்சியில் கடற்படை பணிகள், கப்பல் பயணம், தொடர்பாடல், கப்பல்களுக்கிடையில் நபர்கள் மற்றும் பொருட்களை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் ஹெலிகொப்டர் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பயிற்சி விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான கூட்டுப்பயிற்சிகள் மூலம் இப்பிராந்தியத்தின் கடற்பாதுகாப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வதற்கு அவசியமான திறன்கள் இரு நாட்டு கடற்படையினரும் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.