இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் 'SLINEX-2019' கலந்து கொள்வதற்காக சிந்துரல மற்றும் சுரனிமில கப்பல்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2019ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் (Sri Lanka India Naval Exercise - SLINEX 2019) கலந்து கொள்வதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் படி இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சிந்துரல மற்றும் சுரனிமில ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி இன்று (செப்டெம்பர், 05) பயணித்துள்ளது.

கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க கடற்படையின் கொடிவரிசை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் உபுல் த சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட பல கடற்படை அதிகாரிகளினால் சம்பிரதாய பூர்வமான பிரியாவிடையளிக்கப்பட்டு குறித்த இரு கப்பல்களும் வழியனுப்பி வைக்கப்பட்டன. இப்பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற இரு கப்பல்களும் எதிர்வரும் ஏலாம் திகதி இந்திய துறைமுகமான விசாக பட்டிணத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 07ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூடுப்பயிற்சியில் இலங்கை கடற்படையின் கொடிவரிசை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் உபுல் த சில்வா உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் 323 பேர் பங்குகொள்ளவுள்ளனர். குறித்த கடற்படை கூட்டுப்பயிற்சியில் ஹெலிகொப்டர் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பயிற்சி விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான கூட்டுப்பயிற்சிகள் மூலம் இப்பிராந்தியத்தின் கடற்பாதுகாப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வதற்கு அவசியமான திறன்கள் இரு நாட்டு கடற்படையினரும் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.