கடற்படையினரால் ரூ 12,500 மில்லியனுக்கு அதிக மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுர 2020 மார்ச் 28 சனிக்கிழமையன்று காலை 9.30 மணியளவில் தீவின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல் மைல் (835 கி.மீ) தூர கடலில் போதைப்பொருளைக் கொண்டு சென்று கொண்டிருந்த ஒரு கப்பலைக் கைப்பற்றியது. மாநிலக் கொடி (Flag state) இல்லாத இந்த வெளிநாட்டு கப்பலை சர்வதேச கடலில் கண்டறிந்த பின்னர் குறித்த கப்பல் கடற்படையினரால் சோதனை செய்யப்ட்டதுடன் அங்கிருந்து 500 கிலோ கிராம் ICE போதைப்பொருள் மற்றும் கோகோயின் என சந்தேகிக்கப்படுகின்ற 500 கிலோ கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கபட்டது. மேலும் கப்பலில் 200 பாக்கெட் பாபுல் போதைமருந்து மற்றும் அடையாளம் காணப்படாத 100 கிராம் போதைமாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருட்களின் வீதி மதிப்பு (Street Value) இன்னும் கணக்கிடப்படவில்லை. இருப்பினும், மொத்த போதைமருந்துகளின் விலை ரூ 12,500.00 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்காக இந்த வெளிநாட்டு கப்பல் ஏப்ரல் 01 ஆம் திகதி கடற்படையால் டிக்கோவிட துறைமுகத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வழங்கப்படும். கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வரும்போது கைது செய்யப்பட்ட மூன்றாவது வெளிநாட்டு கப்பல் இதுவாகும். இந்த சம்பவத்திற்கு முன்னர், பிப்ரவரி 22 மற்றும் 25 திகதிகளில் போதைப்பொருள் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் அவைகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடிக் கப்பலொன்று கைது செய்யபட்டதுடன் 16 வெளிநாட்டினர், 05 இலங்கையர்கள் மற்றும் கடலில் போதைப்பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள 06 இலங்கையர்கள் தீவின் தெற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வாரு தொடர்ந்து சர்வதேச கடலில் போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பற்றி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. மேலும், போதைப்பொருள் விநியோகச் சங்கிலியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பங்காளர்களைப் பின்தொடர்வதற்காக இலங்கை கடற்படை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.