காலி பிரதேசத்தில் வெள்ள அபாயத்தை குறைக்கும் வகையில், பாலங்களை அண்மித்த பகுதியில் கடற்படையினரால் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கிங் ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக காலி பிரதேசத்தில் அகலிய மற்றும் தொடம்கொட பாலங்களை அண்மித்த பகுதியில் சிக்கிய மரக்குற்றிகள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்றை 2022 ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி கடற்படையினர் மேற்கொண்டனர்.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கிங் ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால் குப்பைகள், மரக்கட்டைகள், மூங்கில் போன்ற குப்பைகள் அடித்து செல்லப்பட்டு குறுகிய பாலங்களில் சிக்கிக் கொள்கின்றன. இது தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வரும் கடற்படையினர் காலி பிரதேசத்தில் கிங் கங்கையின் குறுக்கே உள்ள பாலங்களை அண்மித்த பகுதிகளில் தேங்கிய கழிவுகளை அகற்றி வெள்ள அபாயத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றுவதற்கு 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையின் விசேட சுழியோடி குழுவொன்று நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.