யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 54 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மாதகல் கரையோரப் பகுதியில் மற்றும் குறித்த கரையோரப் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2023 மார்ச் 28 ஆம் திகதி இரவு மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் போது 165 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவைக் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

இலங்கைக்கு சொந்தமான கடற்கரையோரங்களில் சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், கடற்கரையை உள்ளடக்கி கடற்கரையோர கண்காணிப்பு நிலையங்கள் மூலம் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 மார்ச் மாதம் 28 ஆம் திகதி இரவு வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனத்தின் கடற்படையினரால் யாழ்ப்பாணம், மாதகல் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்குரிய 08 சாக்குகளை அவதானித்து ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு 71 பொதிகளாக பொதி செய்யப்பட்ட 150 கிலோ 390 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனத்தின் கடற்படையினர் 2023 மார்ச் மாதம் 28 ஆம் திகதி இரவு மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த சாக்கு மூட்டை ஒன்று (01) அவதானித்து பரிசோதித்தனர் அப்போது குறித்த சாக்கு மூட்டையில் 07 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட 15 கிலோகிராம் 05 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கடற்கரையோரங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின் காரணமாக கடத்தல்காரர்களால் கரையோரத்திலும் கடலிலும் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 54 மில்லியன் ரூபாய் என நம்பப்படுகிறது. மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கேரள கஞ்சா, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.