கதிர்காமம் பாதயாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்காக கடற்படையினரின் பங்களிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமத்தை நோக்கி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பாதயாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் நோக்கில், இலங்கை கடற்படையினரால் 2026 ஜூலை 10 முதல் 24 ஆம் திகதி வரை தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைகளின் மேற்பார்வையில் சமூக சேவைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலிலிருந்து கும்புக்கன் ஓயா வரையிலான பாதயாத்திரை வழியில் பயணித்த பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு, வழிகாட்டல் மற்றும் பல்வேறு நலன்புரி வசதிகளை கடற்படையினர் வழங்கினர். மேலும், குடிநீர் மற்றும் அத்தியாவசிய வசதிகளை வழங்குதல், அவசர நிலைமைகளில் விரைவான உதவி மற்றும் முதலுதவிகளை வழங்குதல், அத்துடன் பயணப் பாதையில் பாதுகாப்பான சூழலைப் பேணுதல் ஆகியவற்றிற்காக கடற்படை வீரர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆன்மீகப் பயணம் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் அமைவதற்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்கியதன் மூலம், இலங்கை கடற்படை தனது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதிலுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், மக்களுடன் நெருங்கிய மனிதநேய சேவைகளை முன்னெடுக்கும் தனது நீண்டகால பாரம்பரியத்தையும் இதன் மூலம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் முதன்மைப் பொறுப்புகளுக்கு மேலதிகமாக, ஆன்மீக மற்றும் சமூக மதிப்பீடுகளைப் பாதுகாத்து மக்களின் நலனுக்காக இத்தகைய சமூக சேவைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இலங்கை கடற்படை எதிர்காலத்திலும் தனது பங்களிப்பை வழங்க எதிர்பார்க்கிறது.













