காலி கடல் பகுதியில் விபத்திற்கு உட்பட்ட மீன்பிடி படகிலிருந்து 02 மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்
2025 ஜூன் 27 ஆம் திகதி காலி கடல் பகுதியில் விபத்திற்கு உட்பட்ட மீன்பிடி படகு குறித்த தகவல் கிடைத்த உடனேயே, கடற்படையினர், விமானப்படையினருடன் இணைந்து, அந்தக் கடல் பகுதியை உள்ளடக்கிய ஒரு சிறப்புத் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.
அதன்படி, காலியில் இருந்து சுமார் 09 கடல் மைல் (சுமார் 16 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய படகில் இருந்த ஒரு மீனவரை இன்று (2025 ஜூன் 28) காலை மற்றொரு மீன்பிடி படகின் உதவியுடன் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு, மேலதிக சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வந்து காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மேலும், கடலில் விபத்தில் சிக்கிய மீன்பிடி படகில் இருந்த மற்ற மீனவர்களைக் கண்டுபிடிக்க கடற்படையின் சிறப்புக் குழு கடல் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. கவிழ்ந்த படகில் ஒரு மீனவர் இன்னும் உயிருடன் இருப்பது இந்த நடவடிக்கையில் தெரியவந்தது. அதன்படி, படகிற்குள் வாயு சிலிண்டர்களின் உதவியுடன் மீனவருக்கு ஆக்ஸிஜனை வழங்க கடற்படையின் சுழியோடி குழுவினரால் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது, அதே நேரத்தில், படகு கடலில் மூழ்குவதைத் தடுக்க தேவையான தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, சிக்கிய மீனவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, இன்று (2025 ஜூன் 28) மாலை மீனவரை விரைவாகக் கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து, விபத்துக்குள்ளான மீன்பிடி படகில் இருந்த இரண்டு மீனவர்களின் உடல்கள் இன்று மாலை (2025 ஜூன் 28) கரைக்கு கொண்டு வரப்பட்டன, மேலும் கடற்படையின் சுழியோடி மற்றும் மீட்புக் குழுவினர்கள் மற்றுமொரு மீனவரைத் தேடி கடல் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடர்ந்து வருகின்றனர்.