மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற 91 பறவைகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

மன்னார் பேசாலை சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் 2025 செப்டம்பர் 10 ஆம் தேதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தொண்ணூற்றொன்று (91) பறவைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு (01) டிங்கி படகுடன் கைப்பற்றினர்.

அதன்படி, 2025 செப்டம்பர் 10, அன்று, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் பேசாலை கடற்படைப் பிரிவினால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, பேசாலை சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, எழுபத்திரண்டு (72) புறாக்கள் மற்றும் பத்தொன்பது (19) சண்டை சேவல்கள்களை அந்த டிங்கி படகினால் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முறையே 17 மற்றும் 52 வயதுடைய பேசாலை, மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பறவைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.