கல்பிட்டி கடற்கரையில் கடலுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று பதினாறு (1416) கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றினர்.

அதன்படி, தலவில கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதக்கும் நாற்பத்தொரு (41) பைகள் பரிசோதிக்கப்பட்டன. குறித்த நேரத்தில், கடற்படையினரின் நடவடிக்கைகளால் கரைக்கு கொண்டு வர முடியாமல், கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று பதினாறு (1416) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.