சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 1560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படை, மற்றும் காவல்துறையினர் இணைந்து 2026 ஜனவரி 08 ஆம் திகதி கொழும்பு அளுத்கடை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து ஐநூற்று அறுபது (1560) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல, வலான காவல்துறையின் மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் கொழும்பு அளுத்கடை பகுதியில், நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) நபர்கள் விசாரிக்கப்பட்டனர். அங்கு, குறித்த இரண்டு (02) சந்தேக நபர்களும், சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற ஆயிரத்து ஐநூற்று அறுபது (1560) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.

மேலும், இந்த கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 மற்றும் 48 வயதுடைய கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்களும் வெளிநாட்டு சிகரெட் பொட்டலமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கெசல்வத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.