அங்குலான கடலில் 11 கடற்படையினரின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கடற்படைத் தளபதி பாராட்டு தெரிவித்தார்
அங்குலான கடல் பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான P 4447 அதிவேக தாக்குதல் கண்காணிப்புப் படகு விபத்துக்குள்ளான போது, கொந்தளிப்பான கடல் நிலையையும் பொருட்படுத்தாமல் உடனடியாகச் செயல்பட்டு, அதிலிருந்த 11 கடற்படை வீரர்களின் உயிர்களையும் பாதுகாப்பாக மீட்பதற்காகச் சிறப்பு அர்ப்பணிப்புடனும் தைரியத்துடனும் செயல்பட்ட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் அங்குலான பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 10 பொலிஸ் அதிகாரிகளைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2026 ஆகஸ்ட் 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, அங்குலான பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர, அங்குலான பொலிஸ் நிலையத்தின் தலைமை ஆய்வாளர் பொறுப்பதிகாரி சமந்த பண்டார அவர்கள் உட்பட 10 பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிய பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது தொழினேர்த்தியுடனும், தைரியத்துடனும், உடனடித் தலையீட்டுடனும் செயல்பட்டு கடற்படை வீரர்களின் உயிர்களைக் காப்பாற்ற வழங்கிய மகத்தான பங்களிப்பு, இதன்போது கடற்படைத் தளபதியின் சிறப்புப் பாராட்டிற்கு உட்பட்டது. மேலும், தமது கடமை எல்லைகளையும் தாண்டிச் சென்று இந்த உயிர்காப்பு நடவடிக்கைக்காகக் காட்டிய தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இலங்கை கடற்படை மிகவும் கௌரவத்துடன் நினைவுகூர்ந்தது.
மேலும், இந்த உயிர்காக்கும் நடவடிக்கையின் போது கடற்படையினரின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக இலங்கை பொலிஸார் வழங்கிய ஒத்துழைப்பு, இலங்கை கடற்படைக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையிலான பலமான நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கு ஒரு சிறந்த சான்றாவதுடன், இந்த பாராட்டு அந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும்.













