இலங்கை கடற்படையின் 264 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 269 பயிற்சி கடற்படையினர் கடற்படை சேவையில் இணைத்தனர்
இலங்கை கடற்படையின் 264 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 249 நிரந்தரப் பயிற்சி கடற்படையினரும், 20 தன்னார்வப் பயிற்சி கடற்படையினரும் உள்ளடங்கலாக மொத்தம் 269 பயிற்சி கடற்படையினர் தமது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, 2026 ஜூலை 04 ஆம் திகதி பூனேவ, இலங்கை கடற்படை கப்பல் 'சிக்ஷா' (SLNS Shiksha) நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் வெளியேறினர். இந்த அணிவகுப்பு நிகழ்வின் பிரதம அதிதியாக வட கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கலந்துகொண்டார்.
சவாலான தொழில் வாய்ப்பைத் தேடும் ஆற்றல்மிக்க இளைஞர், யுவதிகளுக்கு, இலங்கை கடற்படையில் இணைந்து பல்வேறு தொழில் துறைகள் ஊடாக தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை கடற்படை வழங்கியுள்ளது.
அதற்கமைய, 264 ஆவது ஆட்சேர்ப்பின் கீழ் அடிப்படைப் பயிற்சிக்காக, கடற்படையின் முன்னணி பயிற்சி கடற்படையினருக்கான பயிற்சி நிறுவனமான பூனேவ, இலங்கை கடற்படை கப்பல் 'சிக்ஷா' நிறுவனத்திற்கு இக்குழுவினர் இணைக்கப்பட்டிருந்தனர்.
'சிக்ஷா' நிறுவனத்தில் வழங்கப்பட்ட கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய பயிற்சி கடற்படையினருக்கு, பிரதம அதிதியினால் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதன்படி, 264 ஆவது ஆட்சேர்ப்பின் 269 பயிற்சி கடற்படையினரில் சிறந்த பயிற்சி கடற்படையாளருக்கான விருது பயிற்சி மாலுமி எம்டிபிஎச் திஸாநாயக்கவிற்கும், அனைத்துப் பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவருக்கான விருது பயிற்சி மாலுமி எஸ்.ஏ தல்பகேவிற்கும் வழங்கப்பட்டது. மேலும், சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது பயிற்சி மாலுமி பி கம்சனிற்கும், சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது பயிற்சி பெண் மாலுமி எச்ஏஏ ருவந்திகாவுக்கும் மற்றும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான விருது பயிற்சி மாலுமி என்எம்டிஎல் நவரத்னவிற்கும் வழங்கப்பட்டது. அத்துடன், 264 ஆவது ஆட்சேர்ப்பின் சிறந்த பிரிவிற்கான விருது 'ரணஜய' பிரிவிற்கு வழங்கப்பட்டது.
இந்த அணிவகுப்பில் உரையாற்றிய ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, பாடசாலைக் கல்வியின் பின்னர் கடற்படை சேவையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், சிறந்த ஆளுமை கொண்ட தைரியமான குடிமக்களாக அவர்களால் மாற முடிந்துள்ளதை வலியுறுத்தினார்.
இது பயிற்சியின் ஆரம்பம் மாத்திரமே என்றும், எதிர்காலத்தில் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் பயன்பாடு, நவீன தொழில்நுட்ப முறைகள் மற்றும் சர்வதேச கடல்சார் மற்றும் தொழில்நுட்பப் போக்குகள் குறித்து தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரு கடற்படை உறுப்பினரின் மிக மதிப்புமிக்க சொத்து அவரது ஒழுக்கமும் பயிற்சியும் என்றும், அது எப்போதும் அவர்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, தாங்கள் பெற்ற சிறப்பான பயிற்சி மற்றும் திறன்களை சமூகத்தில் நிலவும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த சமூகத்தில் உள்ள சில நபர்கள் முயற்சி செய்யக்கூடும் என்பதால், அது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கடற்படையினருக்கு அறிவுரை வழங்கினார். கடற்படையின் கடமை என்பது எல்லைப் பாதுகாப்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், எமக்கு உரித்தான பரந்த கடல் பிராந்தியம் மற்றும் பிரத்யேக பொருளாதார வலயத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல், கடல்சார் வளங்கள் மற்றும் மீன்வளத்தைப் பாதுகாத்தல், கடல்சார் போக்குவரத்தைப் பாதுகாத்தல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது உடனடிப் பதிலளித்தல் போன்றவை அவர்களின் பொறுப்பாகும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
தமது பிள்ளைகளை தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கத் தீர்மானித்த அன்புப் பெற்றோர்களுக்கு கடற்படையின் கௌரவமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதம அதிதி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் தமது பிள்ளைகளை ஊக்கப்படுத்துமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
வெளியேறும் பயிற்சி கடற்படையினரின் அணிவகுப்பு, கடற்படை இசைக்குழு மற்றும் கலாச்சார நடனக் குழுவின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கடற்படையின் அங்கம்ஹரப குழுவின் சாகசங்களுடன் இந்த நிகழ்வு வண்ணமயமாக அமைந்தது. கடற்படையின் பாரம்பரிய சூரிய அஸ்தமனச் சம்பிரதாயங்களுடன் இந்த அணிவகுப்பு நிகழ்வு நிறைவடைந்தது.
மேலும், இந்த அணிவகுப்பில் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி உட்பட வடமத்திய கடற்படை கட்டளை , கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் பயிற்சி முடித்து வெளியேறும் கடற்படையினரின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.













