டெங்கு நுளம்புளை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய திட்டத்திற்கு கடற்படையினரின் தீவிர பங்களிப்பு
"டெங்கு நோயற்ற கொழும்பு நோக்கி" (Towards a Dengue-Free Colombo) என்ற கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத் தொடரின் ஐந்தாவது நாளான இன்றும் (2026 ஜூலை 09), கடற்படையினர் தங்களது தீவிரப் பங்களிப்பை வழங்கி இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளித்தனர். 'க்ளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை காவல்துறையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது, டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதையும், பொதுமக்களிடையே ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
சுகாதார மருத்துவ அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து, மேற்கு கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த எழுபத்தேழு (77) கடற்படை வீரர்கள் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பங்களிப்பு வழங்கினர். இதற்கமைய, பொரளை, கோட்டை, பாணந்துறை, மஹர, வத்தளை, முகத்துவாரம் மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய பகுதிகளில் அறுபது (60) இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கு டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆயிரத்து எழுநூற்று தொண்ணூற்றாறு (1,796) இடங்கள் கண்டறியப்பட்டன. மேலும், இந்த பரந்தளவிலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், டெங்கு ஒழிப்பு செயல்முறை குறித்த நூற்றொன்று (101) விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
மேலும், இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் ஊடாக சுற்றுச்சூழலை முறையாகப் பரிசோதனைக்கு உட்படுத்தி, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றைச் சுத்தப்படுத்துவதற்கும் அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்தப் பகுதிகளைக் நுளம்புகள் அற்ற பாதுகாப்பான வலயங்களாக மாற்றுவதற்கான தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மேலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













