அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவு சொற்பொழிவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவை கெளரவிப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் ஏற்பாடு செய்த நினைவு சொற்பொழிவு 2021 பிப்ரவரி 19 அன்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலைமையில் பத்தரமுல்ல சுஹுருபாயவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ஆயுதப் படைவீரர்களின் நினைவேந்தல் சொற்பொழிவு, இந்த ஆண்டு இலங்கை கடற்படையின் 11 ஆவது தளபதியாக பணியாற்றும் போது எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளின் தற்கொலைப் தாக்குதலால் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நினைவு சொற்பொழிவு இலங்கை கடற்படையின் 16 வது கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) திசர சமரசிங்க நிகழ்த்தினார்.

அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ 1957 ஆம் ஆண்டில் ராயல் சிலோன் கடற்படையில் ஒரு கேடட் அதிகாரியாக சேர்ந்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை ஆயுதப்படைகளால் தொடங்கப்பட்ட பல நடவடிக்கைகளில் தனது பங்களிப்பை வழங்கிய ஒரு சிறந்த கடற்படை மூலோபாயவாதி என்று அறியப்பட்டார். 1991 நவம்பர் 01 அன்று இலங்கை கடற்படையின் 11 வது கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட அவர் 1992 நவம்பர் 16, அன்று, தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் கடற்படை தலைமையகத்திற்கு செல்லும் போது எல்.டி.டி.இ தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலால் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தார். மூன்று தசாப்தங்களாக நாட்டை பாதித்த கொடூரமான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் நாட்டிற்காகவும் தேசத்துக்காகவும் தனது உயிரைத் தியாகம் செய்த மூத்த இலங்கை ஆயுதப்படை அதிகாரியாக இவர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நினைவு உரைக்காக அட்மிரல் (இறந்த) கிளான்சி பெர்னாண்டோவின் மனைவி மற்றும் மகன், பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) டாக்டர் சரத் வீரசேகர, ஓய்வுபெற்ற கடற்படை தளபதிகளான வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர் அட்மிரல் (ஓய்வு) ஜயநாத் கொலம்பகே, ரியர் அட்மிரல் (ஓய்வு) பசில் குணசேகர, அட்மிரல் (ஓய்வு) தயா சந்தகிரி, முப்படைகளின் ஓய்வு பெற்ற மற்றும் சேவை செய்யும் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.