“SHIPWRECKS AROUND SRI LANKA” என்ற இணையதள வெளியீட்டிற்கு கடற்படையின் உதவி
இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால், கடற்படையின் ஒத்துழைப்பு மற்றும் ஏற்பாட்டில், “SHIPWRECKS AROUND SRI LANKA” என்ற இணையதளத்தின் ஆரம்ப விழா 2026 மார்ச் 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி, அட்மிரல் கான்சன பானகொட கலந்துகொண்டார்.
அதன்படி, இலங்கையின் நீருக்கடியில் உள்ள கடல்சார் பாரம்பரியத்தை உலகிற்கு ஆவணப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் ஒரு தேசிய நவீன தளமாக இந்த “SHIPWRECKS AROUND SRI LANKA”இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை கடற்படையின் மூழ்குதல் மற்றும் மீட்புப் பிரிவு, தேவையான அனைத்து நீருக்கடியில் ஆய்வுப் பணிகள், கணக்கெடுப்புகள், புகைப்படம் மற்றும் காணொலிப் பதிவுகள், மற்றும் மூழ்குதல் உதவிகளை வழங்கியது.
தற்போது, இந்த இணையதளத்தில், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் அமைந்துள்ள, ஏறக்குறைய எழுபது (70) கப்பல் சிதைவுகள் பற்றிய தகவல்கள் உள்ளன. “SHIPWRECKS AROUND SRI LANKA” என்ற இணையதளம், தீவிற்கு அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்வழி வர்த்தகப் பாதைகளைப் பிரதிபலிக்கும் வகையில், 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி, முகலாயப் பேரரசு காலம், காலனித்துவ காலம் மற்றும் உலகப் போர்களின் போது நிகழ்ந்த கப்பல் சிதைவுகள் குறித்த தகவல்களை வழங்குகிறது.
நாட்டின் நீருக்கடியில் உள்ள தளங்களின் ஆய்வாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் தனித்துவமான மூழ்கல் அனுபவங்களையும் மதிப்புமிக்க வரலாற்றுப் பார்வைகளையும் வழங்கும் இந்தத் திட்டம், நாட்டின் மூழ்கல் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக தொழில்முறை பங்களிப்புகளையும் திறன்களையும் அளிக்கும் பொருட்டு, இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பையும் முன்முயற்சியையும் பிரதிபலிக்கிறது.
குறிப்பாக ஆழ்கடலில் அமைந்துள்ள கப்பல் சிதைவுகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றதுடன், இலங்கை கடற்படையால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, இலங்கையை சர்வதேச அளவில் முன்னணி கடல் கப்பல் சிதைவு மூழ்கல் தலமாக மேம்படுத்துவதற்கு ஒரு பெரும் உந்துதலை வழங்கும்.


