சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 78 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த இரண்டு வாரங்களில் (2025 செப்டம்பர் 01 முதல் 15 வரை) உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட எழுபத்தெட்டு (78) சந்தேக நபர்களுடன், முப்பத்தைந்து (35) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) பல நாள் மீன்பிடி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் பாதகமான தாக்கத்தைத் தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் இலங்கை கடற்படை உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையினால் திருகோணமலையில் உள்ள கல்லராவ, வலைத்தோட்டம், தேங்காய் முனை, கொடிமுனை, நோர்வே தீவு, போல்டர் முனை, கோகிலாய், ரெட் ராக், சிலாவத்தை, ஜெயநகர் சல்லிமுனை, குச்சவெளி, ஆவுக்குபாடு மற்றும் கிண்ணியா ஆகிய கடற்கரைகள் மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவு, யாழ்ப்பாணத்தில் சுண்டிகுளம் மற்றும் கடைக்காடு கடல் பகுதிகளையும், தென்கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவு, காரைதீவு முதல் நிந்தவூர் வரையிலான கடல் பகுதிகளையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகள் மூலம் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எழுபத்தெட்டு (78) சந்தேக நபர்களையும், முப்பத்தைந்து (35) டிங்கி படகுகளையும், (01) பல நாள் மீன்பிடிக் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கைகளின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், வெடிபொருட்கள் மற்றும் மீன்பிடி படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, சாம்பூர், வெருகல், கோட்பே, குச்சவெளி, கிண்ணியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.