EVENT NEWS 2026

கடற்படையினரின் உழைப்புப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட 35 இடைத்தங்கல் வீடுகள் நுவரெலியாவில் இடம்பெயர்ந்த குடும்பங்களிடம் கையளிப்பு

05 Aug 2026

‘டிட்வா’அனர்த்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த நுவரெலியா யுனிக் வியூ கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்காக இலங்கை கடற்படையினரின் உழைப்புப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட முப்பத்தைந்து (35) இடைத்தங்கல் வீடுகள் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வு இன்று (2026 ஆகஸ்ட் 05) நுவரெலியா நகர சபை விளையாட்டு மைதானப் பகுதியில் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சுமார் நூறு (100) கடற்படை வீரர்களின் உழைப்புப் பங்களிப்புடன் எழுபத்தைந்து (75) நாட்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள் நிர்மாணிக்கப்பட்ட இந்த இடைத்தங்கல் வீட்டுத்திட்டம், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் கண்ணியமான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்காக சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM), யுனிசெப் (UNICEF) மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன நிதி அனுசரனையை வழங்கியிருந்ததோடு, இதன் மூலம் நுவரெலியா யுனிக் வியூ கிராமத்தில் இடம்பெயர்ந்த முப்பத்தைந்து (35) குடும்பங்களுக்கு புதிய இருப்பிட வசதிகள் கிடைத்துள்ளன.

இத்திட்டமானது இலங்கை கடற்படையினரின் சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் திறம்படச் செயல்படும் ஆற்றல் ஆகியவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தும் மற்றொரு வெற்றிகரமான திட்டமாகக் கருதப்படுவதோடு, அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகக் கடற்படை வழங்கி வரும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்நிகழ்வில் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் ஷாலிகா லிந்தகும்புர, பிரதேச செயலாளர் லஹிரு கலுகம்பிட்டிய, நகர முதல்வர் உபாலி வனிகசேகர உள்ளிட்ட அரச அதிகாரிகளும், இலங்கை கடற்படைக் கப்பல் ஷில்ப ஆயத்தளத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் ஹேமந்த ரணசிங்க உள்ளிட்ட கடற்படை வீரர்களும் கலந்து கொண்டனர்.

Accessibility Tools